முடிந்தால் சாலையில் இறங்கி போராடுங்கள்.. சிந்தியாவிற்கு கமல்நாத் சவால்.. ம. பியில் முற்றும் மோதல்!
ஜோதிராதித்யா சிந்தியா நினைத்தால் அவர் சாலையில் இறங்கி போராடட்டும் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
போபால்: ஜோதிராதித்யா சிந்தியா நினைத்தால் அவர் சாலையில் இறங்கி போராடட்டும் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வரும் குழப்பம், பூசல் தற்போது வெளிப்படையாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. அங்கு ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் கமல்நாத் இடையிலான சண்டை முற்றி இருக்கிறது.
கமல்நாத் முதல்வர் ஆனது, அம்மாநில காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சிந்தியாவிற்கு பிடிக்கவில்லை. தற்போது சிந்தியா கமல்நாத் அரசை நேரடியாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.
சாலையில் இறங்கி போராடுவேன்.. மபி கமல்நாத் அரசை நேரடியாக எதிர்க்கும் சிந்தியா.. காங்கிரசில் கலகம்!
என்ன சொன்னார்
போபாலில் ஆசிரியர்கள் உடன் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில், சிந்தியா பேசினார். அதில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவுள்ளது. ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வாக்குறுதி எப்படி
வாக்குறுதிகள் பல இன்னும் நிஜமாகவில்லை. உங்கள் எல்லோருடைய கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நான் உங்களுடன் உடன் இருப்பேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இருப்பேன். நானே அரசுக்கு எதிராக போராடுவேன். சாலையில் இறங்கி போராடுவேன், என்று குறிப்பிட்டார்.
பதிலடி
இதற்கு தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார். அதில் வாக்குறுதிகள் என்பது ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் விஷயம் இல்லை. வாக்குறுதிகள் என்பது ஐந்து வருடத்திற்கானது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். விரைவில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
சவால்
நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சிந்தியா கூறுகிறார். இது அவரின் கருத்து. அவருக்கு விருப்பம் இருந்தால் அவர் சாலையில் இறங்கி போராடலாம். நாங்கள் அவரை தடுக்கவில்லை. எல்லா கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் இருக்கிறது. உட்கட்சி பூசல்கள் எழுவதை யாராலும் தடுக்க முடியாது, என்று கூறியுள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸில் இரண்டு முக்கிய தலைவர்கள் இப்படி சண்டை போடுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.