இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி இல்லை என மேல்மட்டத்தில் மாற்றிவிட்டனர்: மாஜி உள்துறை செயலாளர் பிள்ளை
டெல்லி: குஜராத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில் அரசியல் தரப்பில் அதாவது மேல்மட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் அப்பாவி என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளித்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி இஷ்ரத் ஜஹான் தங்கள் அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில்,
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குஜராத் நீதிமன்றத்தில் இரண்டு முறை அபிடவிட் தாக்கல் செய்தது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் அபிடவிட்டில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இரண்டு மாதத்தில் மற்றொரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது அபிடவிட்டில் இஷ்ரத் உள்ளிட்டோர் தீவிரவாதிகள் என்ற வார்த்தை நீக்கப்பட்டது. இரண்டாவது அபிடவிட் அரசியல் தரப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நான்கு பேருக்கும் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அபிடவிட்டில் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று என் அளவில் இல்லை மாறாக உயர்மட்ட அளவில் மாற்றப்பட்டதால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இது குறித்து உங்களுக்கு ஏதாவது விளக்கம் வேண்டுமானால் மாற்றம் செய்த அரசியல் தரப்பை கேளுங்கள் என்றார்.
ஜி.கே. பிள்ளை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கையில் அவரது துறையின் செயலாளராக இருந்தவர். இந்நிலையில் பிள்ளையின் கருத்து குறித்து சிதம்பரம் கூறுகையில்,
முதலாவது அபிடவிட்டில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உளவுத் துறையோ தங்களின் வேலை உளவு பார்ப்பது தான் எனவும், யார் மீதும் குற்றம் சுமத்துவது இல்லை என்றும் தெரிவித்தது.
நாங்கள் யாரையும் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டவில்லை என உளவுத் துறை தெரிவித்தது. இதையடுத்து உளவுத் துறையின் சரியான நிலைப்பாட்டை தான் இரண்டாவது அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டது என்றார்.