எழுத்தாளர்களுக்கு முடியவில்லை என்றால் நிறுத்திக்கட்டும்: இப்படி பேசும் மத்திய அமைச்சர்
டெல்லி: கருத்துரிமை பாதிக்கப்படுவதால் எழுத முடியவில்லை என்றால் எழுதுவதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும் என்று சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்கள் பற்றி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது அக்லாக்(50) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்து மதத்தை விமர்சித்த காரணத்திற்காக கன்னட எழுத்தாளர் கல்பர்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.
இதுவரை நேருவின் சகோதரியின் மகள் நயன்தாரா ஷாகல் உள்பட 23 பேர் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில்,
அவர்களால் எழுத முடியவில்லை என்று கூறினால் முதலில் எழுதுவதை நிறுத்தட்டும். அதன் பிறகு பார்ப்போம். சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்களால் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. விருதை திருப்பி அளிப்பது அவர்களின் விருப்பம். அதை நாங்கள் ஏற்கிறோம் என்றார்.
இந்நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிக்கையான பஞ்சசன்யாவில் கூறப்பட்டிருப்பதாவது,
சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் மதச்சார்பின்மை என்ற நோய் பிடித்துள்ளது. இந்த பேனா கலைஞர்கள் எல்லாம் நம் இந்து ராஜ்ஜியத்திற்கு எதிரானவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.