பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம்... எல்ஐசி எச்சரிக்கை!
எல்ஐசி பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என்று அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி : எல்ஐசி பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என்று அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான ஓடிபி வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையில் பாலிசிதாரர்கள் யாரும் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தங்களது பாலிசிதாரர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் உடன் இணைக்கும் வசதி இன்னும் செயல்பாட்டு வடிவில் தான் இருப்பதால் பாலிசிதாரர்கள் யாரும் குறுந்தகவல்கள் மூலம் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் எல்ஐசி முத்திரையுடன் பாலிசிதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாகவே எல்ஐசி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று எல்ஐசி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் இணையதளத்தில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களைக் கேட்டு ஆதார் எண்ணை பாலிசியுடன் இணைப்பதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் எல்ஐசி கேட்டுக் கொண்டுள்ளது.
Notice - regarding linking of Aadhaar Number through SMS pic.twitter.com/wun1sCKyCV
— LIC India Forever (@LICIndiaForever) November 23, 2017
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மட்டும் 29 கோடி பாலிசிகளை வழங்கியுள்ளது. தவிர, 21 கோடி வாகன காப்பீடு, மற்றும் கணிசமான எண்ணிக்கையில் மருத்துவ காப்பீடுகள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களுடன் சேர்த்து மொத்தம் 54 காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை அனைத்துடனும் ஆதார், பான் எண் இணைப்பது வங்கி கணக்குடன் இணைப்பதை விட கடினமானது என்று பாலிசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.