ரயில்வேயுடன் கைகோர்க்கும் எல்.ஐ.சி - 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம்
டெல்லி: இந்தியாவில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அரசு துறை நிறுவனமாக ரயில்வே துறை திகழ்கிறது. இதேபோல் எல்.ஐ.சியும் மிக முக்கிய துறையாகும். ரயில்வே துறையை மேம்படுத்தவும், கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதியை ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின்படி, ரயில்வே வளர்ச்சி மற்றும் கட்டுமானப்பணிக்காக எல்.ஐ.சி நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும். இதற்கான வட்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு பேசுகையில், "இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான ரயில்வேக்கும், எல்.ஐ.சிக்கும் புதிய பந்தம் உருவாகி உள்ளது. இதன் மூலம் 2 நிறுவனங்களுமே பயன்பெறும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், "ரயில்வேக்கு நீண்ட வரலாறு உள்ளது. ஆனால் ரயில்வே வளர்ச்சிக்கான தேவைகள் அதிகம். மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி ரயில்வேயில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்கது" என்று தெரிவித்தார்.