புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்றார்!
டெல்லி: நாட்டின் 26வது புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் இன்று பொறுப்பேற்றார்.
அடுத்த ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக்கை கடந்த மே மாதம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்திருந்தது.
ஆட்சிக் காலம் முடிவடையும் போது எப்படி ராணுவ தளபதியை நியமிக்கலாம் என்று பாஜக கேள்வி எழுப்பியது. தாம் ராணுவ தளபதியாக இருந்த போது ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டவரை எப்படி புதிய தளபதியாக நியமிக்கலாம் என்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அப்போதைய அரசு, தல்பீர்சிங் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. பின்னர் மோடி அரசு பதவியேற்ற நிலையில் தல்பீர்சிங் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தல்பீர்சிங் நியமனத்தை ஏற்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ராணுவ தளபதி பிக்ரம்சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 26வது ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பிக்ரம்சிங் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தல்பீர்சிங் சுஹாக் 30 மாதங்கள் ராணுவ தளபதி பதவியில் நீடிப்பார். 59 வயதாகும் தல்பீர்சிங் சுஹாக், கடந்த 1987-ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.