எல்ஐசி வைர விழா கொண்டாட்டம்.. பாலிசிதாரர்களுக்கு சிறப்பு போனஸ் அறிவிப்பு
மும்பை: எல்ஐசி வைர விழா கொண்டாட்டத்தையொட்டி பாலிசிதாரர்களுக்கு சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் வைரவிழா மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எல்ஐசி தலைவர் எஸ்.கே. ராய், வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிசிதாரர்களுக்கு ஒரு முறை சிறப்பு போனஸ் அறிவிக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
அதன்படி, கடந்த மார்ச் 31ம் தேதி வரை மற்றும் செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு காலாவதியாகாமல் இருக்கும் பாலிசிகளுக்கு இந்த போனஸ் பொருந்தும். மேலும் பாலிசி தொகையில் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 5 முதல் 60 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும். ஒரு லட்சம் பாலிசி எடுத்தவர் குறைந்த பட்சம் 500 முதல் அதிகபட்சம் 6,000 ரூபாய் வரை பெறலாம். இது எவ்வளவு பாலிசி தொகை செலுத்தப்பட்டுள்ளது மற்றும் முதிர்வு தேதி ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.
இதன் மூலம் 29 கோடி பாலிசிதாரர்களும் 12 லட்சம் குழு பாலிசிதாரர்களும் பயன் அடைவார்கள்.