புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவர் கொலை: 3 சிபிஎம் தலைவர்கள் உள்பட 11 பேருக்கு ஆயுள்
திருவனந்தபுரம்: கேரளாவில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் டி.பி. சந்திரசேகரன் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை துவங்கியவர் டி.பி. சந்திரசேகரன். அவர் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி கோழிக்கோடு மாவட்டம் வட்டக்கரையில் நடுத்தெருவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 76 பேரை கைது செய்து பின்னர் 22 பேரை விடுதலை செய்தனர்.
இந்த வழக்கில் கோழிக்கோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மோகனன் உள்ளிட்ட 36 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோழிக்கோடு சிறப்பு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாராயண பிசாரடி கடந்த 22ம் தேதி தெரிவித்தார்.
அப்போது மோகனன் உள்பட 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் அனூப், கிர்மானி மனோஜ், கோடி சுனி, ரெஜீஸ், முகமது ஷாபி, சுஜித், சினோஜ், குஞ்சு நந்தன், ராமச்சந்திரன், டவுசர் மனோஜ், ரபீக், பிரதீபன் ஆகிய 12 பேரின் தண்டனை விவரங்கள் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்றார். அதன்படி இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் பிரதீபனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் மற்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கிடைத்தவர்களில் 3 சிபிஎம் தலைவர்களும் அடக்கம்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாகவும், தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்த சந்திரசேகரனின் மனைவி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.
மேலும் தநது கணவரின் கொலை வழக்கை சிபிஐ மறுவிசாரணை செய்யக் கோரி வரும் 3ம் தேதி முதல் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.