விமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி
அகமதாபாத்; ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டிய வழக்கில், மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2017ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, அகமதாபாத் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நீதிபதி, கே.எம்.தாவே இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றவாளியான, பிர்ஜு சல்லாவுக்கு 5 கோடி அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை, குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும், ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி.
மும்பை-டெல்லி நடுவே இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் 9w339ல் 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிர்ஜு சல்லா பயணித்தார். அப்போது, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில், விமானத்தை கடத்தப்போவதாக எழுதி, அந்த டிஷ்யூ பேப்பரை, பிசினஸ் கிளாஸ் பகுதியிலுள்ள கழிவறையில் வைத்திருந்தார்.
இதை கண்டறிந்ததும், விமானம் அவசரமாக, அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. பிர்ஜு சல்லா கைது செய்யப்பட்டார். தனது காதலி, டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், பணியாற்றி வருவதாகவும், இவ்வாறு மிரட்டல் விடுத்தால், டெல்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, காதலி, மும்பை அலுவலகத்திற்கே வருவார் என்ற ஆசையில், இவ்வாறு செய்ததாகவும், பிர்ஜு சல்லா வாக்குமூலம் அளித்திருந்தார்.
பிர்ஜு சல்லா எழுதியிருந்த மிரட்டல் வாசகத்தில், விமானம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கடத்தப்படும் என்றும், அல்லா சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தையடுத்து, பிர்ஜு சல்லா எந்த ஒரு விமானத்திலும் பறக்க முடியாது என்ற பட்டியலில் கொண்டு வரப்பட்டார். இந்தியாவில், இதுபோன்ற பட்டியலுக்கு உள்ளான முதல் குற்றவாளி, பிர்ஜு சல்லா என்பது குறிப்பிடத்தக்கது.