ராஜஸ்தான் சூட்டில் நடத்தப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றி, வெற்றி, வெற்றி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்.ஏ.எல்.) தயாரித்துள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர் வெட்ப சூழலில் நடத்தப்பட்ட தீவிர பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்.ஏ.எல்.) தயாரித்துள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர் சூடான பருவநிலையிலும் சிறப்பாக செயல்படுமா என்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு வாரம் நடந்த சோதனை ஓட்டத்தில் ஹெலிகாப்டர் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இது குறித்து ஹெச்.ஏ.எல். தலைவர் டி. சுவர்ண ராஜு ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
ஹெலிகாப்டர் சோதனையின்போது இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் அனுபவம் வாய்ந்த விமானிகள் இருந்தனர். 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஹெலிகாப்டர் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்காக இலகு ரக போர் ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் கடுங்குளிரில் இலகு ரக போர் ஹெலிகாப்டரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா 2015 விமானக் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இந்த ஹெலிகாப்டர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.