மைசூர் அருகே சோகம்.. மின்னல் தாக்கி 7 பேர் பரிதாப பலி #Bengalururains
மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடக பகுதிகள் பலவற்றில் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்து வருகிறது. இன்று நண்பகல் முதல் மாலை வரை பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல மைசூர் மாவட்டம், பிரியாபட்டணம் தாலுகாவிலுள்ள நந்தினாதபுரா கிராமத்தில் இன்று மாலை மின்னல் தாக்கியதில், அந்த ஊரை சேர்ந்த சுஜய் (15), சுவர்ணம்மா (45), புட்டண்ணா (60), சுதீப், திம்மேகவுடா, உமேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.