லிங்காயத்துகளுக்கு தனி மத அந்தஸ்து.. பாஜகவுக்கு எதிராக சித்தராமையாவின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'
Recommended Video
பெங்களூர்: லிங்காயத்து பிரிவினருக்கு தனி மத அங்கீகாரம் கொடுக்க சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு மற்றொரு செக் வைத்துள்ளார் சித்தராமையா.
கர்நாடகாவில் லிங்காயத்து, ஒக்கலிகர் (கவுடா), குருபர், தலித் ஆகிய நான்கு ஜாதியினர் அதிகம் வாழ்கிறார்கள். துணை பிரிவான வீர சைவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், எண்ணிக்கை அடிப்படையில், லிங்காயத்து பிரிவினர்தான் அதிக மக்கள் தொகையினர்.
[Read This: சமூக புரட்சிக்கு விதைபோட்ட 'லிங்காயத்துகள்' வரலாறு இதுதான்! புதிய மதமானது இப்படித்தான்!! ]
சமூக, பொருளாதார ரீதியாகவும் மேம்பட்ட நிலையில் உள்ளனர் லிங்காயத்துகள்.
வழிபாட்டு முறை
சமூக புரட்சியாளர் பசவண்ணர் வழியில், சிவனை வழிபடுபவர்கள் லிங்காயத்துகள். எந்த ஜாதியினராக இருந்தாலும், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து லிங்காயத்தாக மாற முடியும். எனவே ஜாதி பிரிவு என்பதை தாண்டி, இது ஒரு வழிபாட்டு முறையாகத்தான் பார்க்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் பாஜகவுக்கே வாக்களித்து வருபவர்கள். பிற கட்சிகளிலும் லிங்காயத்து ஜாதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இருந்தாலும், பாஜகவை சேர்ந்த, லிங்காயத்து பிரிவை சேர்ந்த, முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் லிங்காயத்துக்கள் வாக்குகளை கொத்தாக ஈர்த்து வந்தனர்.
கமிட்டி பரிந்துரை
இந்த நிலையில்தான், லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகாரம் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய, சித்தராமையா தலைமையிலான அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் கமிட்டி அமைத்தது. இதற்கு, இந்து மத நம்பிக்கை அடிப்படையில் சிவனை வழிபடும் வீரசைவர்கள் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பசவண்ணர் காட்டிய வழியில் சிவனை வழிபடுவோர் ஆதரவு தெரிவித்தனர். கடந்த டிசம்பரில், நாகமோகன்தாஸ் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். எதிர்பார்த்தபடியே, லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.
சிறுபான்மை அந்தஸ்து
இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், நாகமோகன்தாஸ் அறிக்கையை ஏற்பது என்றும், மத்திய அரசு இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கர்நாடக அரசு திட்டப்படி, லிங்காயத்துகளுக்கு, முஸ்லிம்களை போன்ற சிறுபான்மை மதம் என்ற அந்தஸ்து வழங்கப்படும். இதனால் லிங்காயத்து ஜாதியினர் பல சலுகைகளை அனுபவிக்க முடியும். எனவே சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது லிங்காயத்துகளின் பாசப்பார்வை விழுந்துள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், சித்தராமையாவும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்.
மத்திய அரசுக்கு தர்ம சங்கடம்
இப்போது பந்து, மத்திய அரசின் கோர்ட்டில் உள்ளது. இந்துக்களாகவே இவ்வளவு காலம் லிங்காயத்துகளை கருதிவந்துவிட்டு இப்போது அதில் இருந்து தனி மதமாக அவர்களை பிரிப்பதற்கு ஒப்புதல் வழங்குவது என்பது இந்துத்துவா கோட்பாடு கொண்ட பாஜகவிற்கு ஏற்புடையது இல்லை. ஆனால், அங்கீகாரம் தராவிட்டால், லிங்காயத்துகள் கோபத்திற்கு ஆளாகி, மிகப்பெரிய வாக்கு வங்கியை கோட்டைவிட நேரிடும். ஒருவேளை தேர்தலுக்காக சந்தர்ப்பவாதமாக தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கர்நாடக அரசின் பரிந்துரைக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் வழங்கினாலும், சித்தராமையா அரசுக்கு ஆதாயம்தான். ஏனெனில், அதற்கு முயற்சி எடுத்தது, சித்தராமையாவின் காங்கிரஸ் ஆட்சிதானே. இப்படி ஒரு தர்ம சங்கடத்தில் மத்திய அரசை சிக்க வைத்துள்ளார் சித்தராமையா.
சிக்சர் சித்து
ஏற்கனவே ஹிந்தி திணிப்புக்கு எதிராக கன்னட மொழி உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஊக்கம் கொடுத்தார் சித்தராமையா. ஹிந்திக்கு ஆதரவாக பேசி, வாங்கிக்கட்டியது பாஜக. கர்நாடகாவிற்கு தனி கொடியை உருவாக்கி மத்திய அரசின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் சித்தராமையா. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தராத நிலையில், கன்னட மொழியாளர்கள் கோபத்தை பாஜகவுக்கு எதிராக தூண்டியபடியே உள்ளார் சித்தராமையா. இதில் புதிதாக சேர்ந்துள்ளதுதான் லிங்காயத்து விவகாரம். பாஜகவுக்கு எதிராக அரசியல் கிரிக்கெட்டில், அடுத்தடுத்த பந்துகளில் சித்தராமையா சிக்சர்களை பறக்கவிட்டபடியே உள்ளார். பாஜக பவுலர்கள் நிலைமைதான் படு திண்டாட்டமாக உள்ளது.