கர்நாடகா தேர்தல்... பிறமாநில வாக்காளர்களைக் கவர ‘பிரமுகர்களை’ இறக்குமதி செய்த பாஜக
கர்நாடகா தேர்தலில் பிறமாநில வாக்காளர்களைக் கவர பிரமுகர்களை இறக்குமதி செய்கிறது பாஜக.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிற மாநில வாக்காளர்களைக் கவர தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானாவில் இருந்து முக்கிய பிரமுகர்களை களம் இறக்கியுள்ளது பாஜக.
கர்நாடகா சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே தேர்தல் களம் அதகளப்படுகிறது.
ராகுல் தலைவரான பின் தேர்தல்
குஜராத்தில் நூலிழையில் வெற்றியை கோட்டைவிட்ட காங்கிரஸ் கர்நாடகாவில் சாதித்துக் காட்ட முனைகிறது. ஆட்சியை மீண்டும் தக்க வைப்பதன் மூலம் ராகுல் காந்தியின் தலைமையை வலிமையாக்க வேண்டும் என்பது கர்நாடக காங்கிரஸ் விருப்பம்.
மதமோதல்கள்
பாஜகவோ வழக்கம் போல மத மோதல்களை முன்னே நிகழ்த்தி தேர்தலை எதிர்கொள்கிறது. கர்நாடகாவின் பல பகுதிகளில் மதமோதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்டை மாநில தலைவர்கள்
அதேநேரத்தில் மொழி உரிமை பேசும் போர்வையில் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் அண்டை மாநில தலைவர்களை இப்போதே கர்நாடகாவில் இறக்கிவிட்டது பாஜக. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து 25 முதல் 30 பிரமுகர்களை பாஜக இறக்கியிருக்கிறதாம்.
ஒருங்கிணைப்பு
தங்களது மாநிலத்தவர் வாழும் பகுதிகளில் முகாமிடும் இந்த பிரமுகர்கள் பாஜகவுக்காக பிரசாரம் செய்வார்களாம். இவர்களை கர்நாடகா பாஜக தலைமை ஒருங்கிணைப்பு செய்கிறதாம்.