ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், அடம் பிடிக்கும் வருமான வரித்துறை!
ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் சரி இந்த மாதத்துக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தே ஆக வேண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி: ஆதார் நடைமுறை வழக்கில் உச்சநீதிமன்றம் ஆதாரை கட்டாயப்படுத்த முடியாது என்ற வகையில் தீர்ப்பளித்தாலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தே ஆகவேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் எண் எனப்படும் 12 இலக்க எண் அரசின் சமூக நல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது மத்திய அரசு. இதனால் ஆதார் பெறாதவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு வருமான வரித் துறை இந்த மாதம் 31-ஆம் தேதி வரை காலகெடு விதித்துள்ளது. இவ்வாறு இணைத்தால் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தது ஏற்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தது வருமான வரித்துறை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், தனி மனித ரகசியம் பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமை என்று உத்தரவிட்டது. இதனால் ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கமுடியாது என்று கருதப்பட்டது. அதில் ஒன்று பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதும் ஆகும்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆதாருக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருந்தாலும் இந்த மாத இறுதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது நிச்சயம் செய்தே ஆக வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண் ரத்து செய்யப்பட்டுவிடும்.
கடந்த நிதியாண்டுக்காக அவர்கள் சமர்பித்த வருமான வரி கணக்கும் செல்லாததாகிவிடும் என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.