கைமாறுகிறதா “தேசிய விலங்கு” உரிமை? – சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க போவதாக புதிய சர்ச்சை!
கொல்கத்தா: இந்தியாவில் கடந்த 1972 ஆண்டு முதல் தேசிய விலங்காக உள்ள புலியை நீக்கிவிட்டு சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
மத்திய அரசின் இம்முயற்சிக்கு விலங்கின ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் புலிகளை பாதுகாப்போம் என்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அது திசை மாறுகின்றது.
மேலும், புலிகள் சரணாலயத்துக்கு அருகே தொழில் துவங்குவதற்கான வழியையும் ஏற்படுத்திவிடும் என்று விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் மட்டும் சிங்கம்:
இந்தியாவில் 17 மாநிலங்களில் புலிகள் உள்ள நிலையில், குஜராத் என்ற ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே உள்ள சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க முயற்சி செய்வது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பரிமர் நத்வானி கோரிக்கை:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான பரிமல் நத்வானி தான் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்கவேண்டும் என்று கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கை பரிசீலனைக்கு:
இதையடுத்து நத்வானி கோரிக்கை, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய வனவிலங்கு வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த வாரியத்தில் பலரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
வனவிலங்கு வாரியம் அறிவிப்பு:
இந்த வாரியத்தின் தலைவராக உள்ள பிரகாஷ் ஜவ்டேகர் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்து கடந்த மார்ச் மாதம் பரிசீலித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரிவான ஆலோசனை நடத்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தேசிய வனவிலங்கு வாரிய உறுப்பினரான ராமன் சுகுமார் கூறியுள்ளார்.
2012ல் திட்டம் இல்லை:
கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே இது குறித்து நத்வானி கோரிக்கை வைத்த போது, மாநிலங்களவையில் பேசிய அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், அப்படி யோசிக்கும் திட்டம் கூட அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
மீண்டும் அதே பதில்:
கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் நத்வானி எழுப்பியபோது, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரும், சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று கூறியிருந்தார்.
புலிகளை ஏன் நீக்க வேண்டும்:
ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலேயே 411 சிங்கங்கள் தான் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 2200 புலிகள் உள்ளபோது எதற்காக புலியை நீக்கிவிட்டு தேசிய விலங்காக சிங்கத்தை அறிவிக்கவேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.