நள்ளிரவில் ஜுனகத் நகர சாலைகளில் ஜாலியாக ரேம்ப் வாக் வந்த குஜராத் கிர் காடு சிங்கங்கள்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் ஜுனகத் நகரில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள சாலையில் 8 சிங்கங்கள் ஜாலியாக வலம் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜுனகத் நகரத்தின் சாலை ஓரத்தில் நேற்று இரவு 8 சிங்கங்கள் உல்லாசமாக நடந்து சென்றன. அதில் இரண்டு குட்டி சிங்கங்கள்.
அவ்வழியாக சென்ற சிலர் சிங்கங்களை கண்டு கடும் பீதி அடைந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இந்த சிங்கங்கள் நடமாடியுள்ளது. இதனை செல்போனில் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
ஜுனாகத் குடியிருப்புப் பகுதியில் சிங்கங்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அம்ரேலி அருகே ஆடு மேய்க்கும் நபர் ஆட்டுக்கு புல் எடுக்க சென்றபோது 3 சிங்கங்கள் தாக்கியதாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். படுகாயம் அடைந்த அந்த நபர் சவர்குன்ட்லா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அம்ரேலி மாவட்டத்தில் சுமார் 3 பேர் சிங்கம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.