குடியால் விபரீதம் – மர்மநபர்களால் கொல்லப்பட்ட பெங்களூர் பெண்.. எரிக்க முயன்றதால் பரபரப்பு!
பெங்களூர்: பெங்களூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெண்ணை கொலை செய்து, உடலை மர்மநபர்கள் எரிக்க முயன்ற பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூர் ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜரகனஹள்ளியை சேர்ந்தவர் ஜெயம்மா.
இவருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜெயம்மா கூலி வேலை செய்து வந்தார்.
மது அருந்தும் பழக்கம்:
அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாகவும், தினமும் ஜெயம்மா மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
விநாயகர் பூஜை:
நேற்று முன்தினம் ஜரகனஹள்ளி பகுதியில் உள்ள விநாயகர் சிலைக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள ஜெயம்மா சென்றிருந்தார்.
வீடு திரும்பவில்லை:
ஆனால் நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உடனே ஜெயம்மாவை, அவரது மகள், மகன் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள்.
கொடூரக் கொலை:
ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் தலை நசுங்கி நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் ஜெயம்மா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசாருக்கு தகவல்:
ஜெயம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஜே.பி. நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ஜெயம்மா உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
தீவிர விசாரணை:
அப்போது ஜெயம்மாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக தீவைத்து எரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.