கள் விற்பனைக்கும் தடை எதிரொலி... பதநீர் தயாரிப்பது எப்படி? தமிழகத்தின் உதவியை நாடும் பீகார்
பீகார்: பீகார் மாநிலத்தில் தற்போது கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கள் இறக்கும் சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பதநீர் தயாரிக்கும் முறையை கற்றுத்தர தமிழகத்தின் உதவியை நாடியுள்ளது பீகார் அரசு.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை கடந்த ஏப்ரல் 5-ந் தேதி முதல் அமல்படுத்தினார். அதே நேரத்தில் கள் விற்பனைக்கும் பீகாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது விலக்கு அமலுக்கு பின் கள்விற்பனை தடை சட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்விவகாரத்தை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டு, கள் இறக்கும் பாசி சமூகத்தினரை பீகார் அரசின் முடிவுகள் கடுமையாக பாதிக்கிறது; அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர் என குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் கள் இறக்கும் சமூகத்தினருக்கு வருவாய் கிடைக்கும் வகையில் பதநீர் தயாரிப்பு முறையை கற்றுத்தர பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழகத்தின் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் உதவியை பீகார் அரசு கேட்டுள்ளது. பீகாரில் பொதுவாக பனை மரங்களில் இருந்து கள் மட்டுமே இறக்குகின்றனர்.. அதனை பதநீராக்க அவர்களுக்கு தெரியாது.
இதனால் அம்மாநிலத்தில் பணியாற்றுகிற தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்நடவடிக்கையை பீகார் அரசு மேற்கொண்டுள்ளது.