குடிமகன்கள் உற்சாகம்.. மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதி.. தமிழகத்தில் இல்லை!
குவகாத்தி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள மதுபான கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
அசாமில், மதுபானக் கடைகள், மதுபான ஆலைகள், இன்று முதல் தினமும் ஏழு மணி நேரம் திறக்கப்படும் என்று அந்த மாநில அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான மேகாலயாவில், மதுபானக் கடைகள் மற்றும் மதுபான குடவுன்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்றும் சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் பராமரிக்கப்படும் என்று அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
7மணி நேரம் அனுமதி
அஸ்ஸாம் மாநில கலால் துறை வெளியிட்ட உத்தரவில். "அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறந்திருக்கும் ... மது பாட்டில்கள் மற்றும் பணத்தை கையாளும் போது கடைகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் வேலை செய்யலாம். வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கை சுத்திகரிப்பு மருந்துகளை வழங்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடை திறப்பு
மேகாலய கலால் ஆணையர் பிரவீன் பக்ஷி அனைத்து மாவட்ட துணை ஆணையர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், மதுபான கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவு குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மதுபானக் கடைகளைத் திறக்குமாறு மக்களிடமிருந்து அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பாஜக உட்பட ஆளும் மேகாலயா ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மதுபானக் கடைகளை மூடுவதை எதிர்த்தனர். கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மேகாலயாவில் இதுவரை ஏற்படவில்லை.
ஹைகோர்ட் தடை
இதற்கிடையே ஊரடங்கின் போது மது கிடைப்பதை எளிதாக்க கேரள அரசு முயன்றது. அதாவது மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மதுவை வீட்டிற்கு வழங்கலாம் என்ற அறிவித்தது. ஆனால் அதற்க இந்த மாத தொடக்கத்தில் கேரள உயர் நீதிமன்றத்தால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, அசாம் மற்றும் மேகாலயா போன்று மதுபான விற்பனையை ஜம்மு காஷ்மீரிலும் தளர்த்தக் கோரி ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மது
அவர் தனது டுவிட் பதிவில் "தேசிய ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மது கிடைக்க செய்ய வேண்டும். காஷ்மீரில் இறைச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை, சில மாநிலங்களில் மதுபான தொழிற்சாலைகள் கூட உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன" என்று அப்துல்லா ட்வீட் செய்துள்ளார். நாட்டிலேயே லாக்டவுனில் மதுவிற்பனையை அனுமதித்த ஒரே மாநிலம் மேற்கு வங்காளம் மட்டுமே. அதுவும் போன் செய்தால் வீட்டில் டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது அஸ்ஸாம் மற்றும் மேகலாயாவும் இணைந்துள்ளன.