மது விற்பனை வருமானத்திற்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது.. தமிழகத்திற்கு சுப்ரீம்கோர்ட் குட்டு
நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீ தூரத்துக்குள் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்துக்கு ரூ.25,500 கோடி இழப்பு ஏற்பட்டதாத தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் வைத்தது.
டெல்லி: நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீ தூரத்துக்கு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்துக்கு ரூ.25,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கோர்ட்டில் வாதம் வைத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டியதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி நெடுஞ்சாலைகளில் நிர்ணயிக்கப்ட்ட தூரத்தில் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழக அரசின் வருமானம் குறைந்துள்ளதாகவும், இந்த உத்தரவை நீக்கக் கோரியும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
இதுதொடர்பான விசாரணை இன்று நீதிபதி முன்பு வந்தது. அப்போது தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 1,731 மதுப்பான கடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.25,500 கோடி லாபம் கிடைத்தது. தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவால் அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அரசு வருமானத்துக்காக மனித உயிர்களை பலி கொடுக்க முடியாது. வருமானத்துக்கு மாற்று வழியைத் தேட முயற்சிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.