மோடி அரசின் 23 கேபினட் அமைச்சர்களின் பின்னணி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு உள்ளிட்ட 23 கேபினட் அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றனர்.
மோடியுடன் பதவியேற்றவர்களில் பலர் முந்தைய வாஜ்பாய் அரசில் இடம்பெற்றவர்கள் மோடி அமைச்சரவையில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மோடி அமைச்சரவையின் கேபினட் அமைச்சர்களின் பின்னணி:
ராஜ்நாத்சிங்
பாஜக தலைவராக இருக்கும் ராஜ்நாசிங் இயற்பியல் பேராசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்நாத் அம்மாநில முதல்வராகவும் பதவி வகித்தவர். பின்னர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும் பணியாற்றினார்.
அருண் ஜேட்லி
பாரதிய ஜனதாவின் ராஜ்யசபா தலைவராக இருக்கும் அருண்ஜேட்லி, லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவியர். ஆனாலும் அவர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தொழில்துறை மற்றும் சட்ட அமைச்சராக பணியாற்றியவர் அருண்ஜேட்லி.
நிதின் கட்காரி
பாஜகவின் முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். தற்போது நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜ்
7 முறை லோக்சபா எம்.பியாகவும் 3 முறை எம்.எல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மா ஸ்வராஜ். தமது 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா. 1996ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர். 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார் சுஷ்மா. 1998ஆம் ஆண்டு டெல்லி முதல்வராகவும் சுஷ்மா பொறுப்பு வகித்தார்.
வெங்கையா நாயுடு
ஆந்திராவைச் சேர்ந்ந்த வெங்கையா நாயுடு 2002-2004 ஆம் ஆண்டு பாஜக தலைவராக பதவி வகித்தார். இவரும் வாஜ்பாய் அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.
சதானந்த கவுடா
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சதானந்த கவுடா. அம்மாநில முதல்வராக இருந்த எதியூரப்பா சுரங்க ஊழல் முறைகேட்டில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மாநில முதல்வராக பதவி வகித்தார்.
உமாபாரதி
2003ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தார். பின்னர் ஹூப்ளி கலவர வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முந்தைய வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பணியாற்றியவர்.
நஜ்மா ஹெப்துல்லா
சுதந்திரப் போராட்ட வீரர் மவுலானா அப்துல் கலாம் ஆசாத் குடும்பத்தைச் சேர்ந்த நஜ்மா ஹெப்துல்லா நீண்டகாலம் காங்கிரஸில் பணியாற்றியவர். ராஜ்யசபா துணைத் தலைவராகவும் இருந்தார். 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2007ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
கோபிநாத் முண்டே
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் முண்டே அம்மாநில துணை முதல்வராக பதவி வகித்தவர். லோக்சபாவில் பாஜக துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
ராம்விலாஸ் பஸ்வான்
லோக் ஜனசக்தி தலைவரான ராம்விலாஸ் பஸ்வான். 2004ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவி வகித்தார். தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
கல்ராஜ் மிஸ்ரா
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் கல்ராஜ் மிஸ்ரா. உத்தரப்பிரதேச அமைச்சராகவும் கல்ராஜ் மிஸ்ரா பணியாற்றினார்.
மேனகா காந்தி
இந்திரா காந்தியின் மருமகளான மேனகா காந்தி 1983ஆம் ஆண்டெ ராஷ்டிரிய சஞ்சய் மஞ்ச் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் 1988ஆம் ஆண்டு ஜனதா தளத்துடன் தமது கட்சியை இணைத்தார். அப்போதைய ஜனதா தள அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். வாஜ்பாய் அரசிலும் அமைச்சராக பணியாற்றினார் மேனகா.
அனந்த்குமார்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனந்தகுமார் 6 முறை லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பெங்களூர் தெற்கு தொகுதியில் தொடர்ந்து எம்.பியாக வெற்றி பெற்று வர்கிறவர். இவரும் வாஜ்பாய் அரசில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.
ரவிசங்கர் பிரசாத்
பாரதிய ஜனதாவின் ராஜ்யசபா துணைத் தலைவராக இருக்கும் ரவி சங்கர் பிரசாத் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். இவரும் வாஜ்பாய் அரசில் இணை அமைச்சராக பணியாற்றியவரே.
அசோக் கஜபதி ராஜு
தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஆந்திராவின் விஜயநகரம் லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கபப்ட்டவர். விஜயநகரத்தை ஆண்ட அரச பரம்பரையைச் சேர்ந்தவர் கஜபதி ராஜு.
ஆனந்த் கீதே
சிவசேனாவைச் சேர்ந்தவர் ஆனந்த் கீதே. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆனந்த் கீதே 2002-2004ஆம் ஆண்டு மத்திய கேபினட் அமைச்சராக இருந்தவர். தற்போது சிவசேனாவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருக்கிறார்.
ஹர்ஸிம்ரத் கெளர் பாதல்
சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலின் மருமகள். தற்போது பஞ்சாப் துணை முதல்வரான சுக்பீர் சிங் பாதலின் மனைவி.
நரேந்திரசிங் தோமர்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திரசிங் தோமர் மூத்த பாஜக தலைவர்.
ஜூயல் ஓரம்
ஒடிஷாவின் சுந்தர்கார்க் தொகுதி எம்.பிதான் ஜூயல் ஓரம்.. முந்தைய வாஜ்பாய் அமைச்சரவையில் இவரும் கேபினட் அமைச்சராக இருந்தவர். ஒடிஷா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றியவர்.
ராதாமோகன்சிங்
பீகார் மாநில பாஜக தலைவராக 3 ஆண்டுகாலம் பணியாற்றியவர். பூர்வி சம்ப்ரான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
தவர் சந்த் கெலாட்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் தவர் சந்த் கெலாட். பாஜகவின் தேசிய பொதுச்செயலர்களில் ஒருவர் இவர்.
ஸ்மிருதி இரானி
தொலைக்காட்சி நடிகையான ஸ்மிருதி இரானி 2003ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் கபில்சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போதைய தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.
ஹர்ஷவர்தன்
டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஹர்ஷவர்தன், சாந்தினி சவுக் லோக்சபா தொகுதி எம்.;பி. 1993-98ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்.