திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பாவமோ குற்றமோ அல்ல.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.
பாவம் அல்லவே...
இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.
பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது
இத்தகைய உறவில், பாதிப்புகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
சட்டம் அவசியம்..
இதனால் இத்தகைய உறவில் இணையும் பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.
திருமண உறவைப் போல அங்கீகரியுங்கள்
அத்துடன் வழக்கமான திருமண உறவை அங்கீகரித்தது போல இத்தகைய உறவையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.
திருமணத்துக்கு முன் உடலுறவு?
ஆனால் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை நாடாளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. இதனால் பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.
அதுவேற இதுவேற..
கள்ளத்தொடர்பு, பலதார மணம் ஆகியவை 'திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்' எனும் உறவில் சேர்க்க முடியாது. அவை குற்றச்செயல்களாகும்
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.