இந்திய வரலாற்றில் முதல் முறை.. இனிமேல் உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடி ஒளிபரப்பில் காணலாம்
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்ற விசாரணைகளை லைவ் காட்சிகளாக காண்பிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது முதல் முறையாகும்.
தகவல் அறியும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு இருப்பதால், அரசியல் சாசனம் மற்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும்போது, அதை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க வேண்டும், என்று, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோரிக்கை ஏற்பு
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது,, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம். தீபக் மிஸ்ரா கூறுகையில், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், தனது தரப்பு வழக்கறிஞர் எப்படி வாதிடுகிறார் என்பதை மனுதாரர் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ள, வழக்கு விசாரணையை நேரலை செய்வது உதவியாக இருக்கும் என்றார்.
தலைமை வழக்கறிஞர் கருத்து
மேலும், இந்த விஷயத்தில், பார் சங்கத்தின் பரிந்துரையையும் சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. வரும் 23ம் தேதி, அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் இதுகுறித்து விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காலத்தின் கட்டாயம்
உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக காண்பிப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. முன்னதாக வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது மனுவில், ஒருவேளை நேரலைக்கு வாய்ப்பு இல்லாவிட்டால், வழக்கு விசாரணையை வீடியோவாக பதிவு செய்யவாவது அனுமதி தர வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
செல்போன்களுக்கு தடை
இப்போதுள்ள சூழலில், கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை, போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. கோர்ட் வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் உட்பட யாருமே தங்கள் செல்போனில் கூட வீடியோவோ, போட்டோவோ எடுக்க கூடாது. நீதிமன்ற அறைக்குள் என்றால், செல்போன்களை சைலன்ட் மோட் அல்லது சுவிட்ஸ் ஆப் செய்துவிட வேண்டும் என்ற நடைமுறை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிவி சேனல்
இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு தரப்பு, தேவைப்பட்டால், லோக்சபா, ராஜ்யசபாவுக்கு பிரத்யேக டிவி சேனல்கள் இருப்பதை போல சுப்ரீம் கோர்ட் விசாரணையை நேரலை செய்யவும் டிவி சேனல் உருவாக்க தயார் என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.