அமெரிக்க கைதிகளை விட "மோசமான" நிலையில் மும்பை மக்கள்!
மும்பை: உலகிலேயே மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம் மும்பை தான் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் ஒன்று மும்பை. வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இங்கு குடியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையின் மக்கள் அடர்த்தியைக் குறைக்க மும்பையின் ப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ் திட்டமிட்டது. ஆனால், அத்திட்டம் நடைபெறவில்லை.
மும்பையில் குடியேறும் மக்கள்...
தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக மும்பையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் வாய்ப்புகளை வாரித் தரும் நகரமாக மும்பை இருப்பது தான்.
சொந்த ஊராக்கும் முயற்சி...
இவ்வாறு மும்பையில் குடியேறும் மக்கள், அதனை தங்கள் சொந்த வீடாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், வசதி படைத்தவர்கள் அங்கு சொந்த வீடு வாங்குகிறார்கள், மற்றவர்கள் சேரிப் பகுதியை உருவாக்கி விடுகிறார்கள்.
மக்கள் அடர்த்தி அதிகம்...
இதனால், உலகிலேயே மும்பையில் தான் அதிகளவு மக்கள் தொகை அடர்த்தி காணப்படுகிறது. இவ்வாறு மக்கள் தொகை அதிகரிக்கும் போது மக்களுக்குத் தேவையான இடவசதியை அதிகரிப்பது மற்ற நகரங்களில் வாடிக்கை. ஆனால், மும்பையில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் இந்த அளவானது மாற்றம் செய்யப்படாமலேயே உள்ளது.
அமெரிக்க சிறையை விடக் குறைவு...
மும்பையில் சராசரியாக ஒரு குடிமகனுக்கு 48 சதுர அடி என்ற அளவே வசிக்க இடம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க சிறைகளோடு ஒப்பிடுகையில், அதை விட மிகக் குறைவாகவே உள்ளன. ஆம், அமெரிக்க சிறைகளில் தனியொரு கைதிக்கு 45 முதல் 60 சதுர அடி வரை இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
செலவிற்கு தக்க வருமானமில்லை...
இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் மும்பையில் செலவிற்கு தக்க வருமானமில்லை. சராசரியாக மும்பை வாழ் இந்தியர் ஒருவர் 308.1 ஆண்டுகள் உழைத்தால் மட்டுமே 100 சதுர மீட்டர் குடியிருப்பு வாங்க இயலும் என்கிறது இந்த புள்ளி விபரங்கள். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இதே போன்று வீடு வாங்க, அமெரிக்கர்கள் 48.4 ஆண்டுகள் உழைத்தாலே போதுமானது.
அதிகரிக்கும் சேரிப்பகுதி...
மும்பையில் சரிபாதி மக்கள் சேரிப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு மும்பையில் சேரிப்பகுதியின் அளவு அதிகரித்து வருகிறது. இங்கு வாழும் மக்களின் வருமானது சராசரி இந்திய குடிமகனின் வருமானத்தை விட கூடுதலாகவே உள்ளது.