அத்வானி, ராம்தேவுக்கு "பத்மவிபூஷன்" விருது: மத்திய அரசு பரிசீலனை
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு ராம்தேவ் உள்ளிட்டோருக்கு பத்மவிபூஷன் விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சேவை செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில அரசுகள் மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் பத்ம விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள். என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பத்ம விருது தேர்வில் பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படும் என்று தெரிகிறது. யோகா குரு ராம்தேவுக்கும் பத்மவிபூஷன் விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு பத்ம பூஷன் விருது கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த முறை பத்ம விருதுகள் பெயர் அறிவிப்பு பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.