காந்திநகரை முன்வைத்து அத்வானி என்ற அரசியல் தலைவரின் கதை முடியும் நேரம் இது..!
டெல்லி: குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதிதான் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் அரசியல் வாழ்க்கைக்கு இறுதி அத்தியாயம் எழுதக் கூடியதாக உருவெடுத்திருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் ராஜ்நாத் சிங் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எல்லாமே ஏறு முகம்தான். முதலில் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக அறிவிக்க வைத்தார் ராஜ்நாத்சிங்.
இதனால் லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் பாரதிய ஜனதா எதிர்கொள்ளும் நிலை உருவானது. அப்போதே அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்வானியோ தமது கட்சிப் பதவிகளையே ராஜினாமா செய்தார்.
பிரதமர் வேட்பாளராக மோடி..
அதனால் மோடியின் ஆதரவாளர்கள் அத்வானி வீட்டை முற்றுகையிட்டு பெரும் போராட்டமே நடத்தினர். பின்னர் அத்வானி சமாதானமான நிலையில் அதாவது அத்வானி சமாதனமாகி மூச்சுவிடுவதற்குள் மற்றொரு அதிரடியாக பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்றும் அறிவிக்கப்பட்டது. மோடியின் தேசிய அரசியல் நுழைவை தொடக்கம் முதலே எதிர்த்து வரும் அத்வானி இதையும் ரசிக்கவில்லை.
ஓரம் கட்டப்பட்ட பெருந்தலைகள்
அதன் பின்னர் நாடு முழுவதும் நரேந்திர மோடி மட்டும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தல் பிரசாரத்தில் அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லி போன்ற பெருந்தலைகள் எவருக்குமே வாய்ப்பு அளிக்கப்படவில்லை. லோக்சபா தேர்தலும் நெருங்கிவிட்டது. கருத்து கணிப்புகள் அனைத்துமே பாரதிய ஜனதா தலைமையில்தான் அடுத்த ஆட்சி அமையும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆரூடம் கூறி வருகின்றன.
தேர்தலில் எளிதாக வெல்வது எப்படி?
இதனால் பாரதிய ஜனதாவில் பிரதமர் கனவில் இருக்கும் அனைத்து தலைவர்களுமே "தேர்தலில் எளிதாக வெல்வது எப்படி" என்று சூத்திரம் வகுத்துக் கொண்டு கோதாவில் குதித்துள்ளனர்.
முடிவுரை எழுதுவது எப்படி?
ஆனால் நரேந்திர மோடியோ எந்த ஒரு தலைவருக்குமே அப்படி ஒரு வாய்ப்பை எளிதாக கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக 'பிரதமர் கனவு தலைவர்களுக்கு முடிவுரை எழுதுவது எப்படி?" என்று வியூகம் வகுத்துக் கொண்டார்.
காந்திநகர் தொகுதி..
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில்தான் கடந்த 16 ஆண்டுகாலம் எம்.பி.யாக இருந்து வருகிறார் அத்வானி. இந்த காந்திநகர் தொகுதியிலும் மற்றொரு பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வாரணாசி தொகுதியிலும் தொடக்கத்தில் மோடி போட்டியிட விரும்பினார்.
அத்வானி, ஜோஷியை ஓரம் கட்ட ..
அப்படி போட்டியிடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு பெருந்தலைவர்களை ஓரம் கட்ட முடியும் என்று கணக்குப் போட்டார் மோடி. இதற்கு அத்வானியும், ஜோஷியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பார்த்தனர்.
தோற்கடிப்பார்களோ?
ஒருவழியாக ஜோஷியை சமாதானப்படுத்திவிட்டனர். அத்வானி தொடக்கத்தில் சமாதானமாகவில்லை. பின்னர் காந்திநகரில் போட்டியிட்டால் தம்மை நிச்சயம் மோடி ஆதரவாளர்கள் தோற்கடித்துவிடுவார்கள் என்று அஞ்சி பின்வாங்கத் தொடங்கினார் அத்வானி.
போபாலுக்கு ஓட்டம்
இதனால் மிக பாதுகாப்பாக தேர்தலில் வெல்வதற்காக மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தினார். அம்மாநில முதல்வரான சிவராஜ்சிங் செளகானும் அத்வானியின் வெற்றிக்கு உறுதியளித்திருந்தார். ஆனாலும் விட்டுவிடுமா மோடி அண்ட் கோ?
அதெப்படி விடுவோம்.. காந்திநகர்தான்..
இப்போது மோடி காந்திநகரை விட்டுவிட்டு குஜராத்தின் வதோரா மற்றும் வாரணாசியில் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காந்திநகர் தொகுதியிலேயே அத்வானி போட்டியிடுவார் என்றும் அதிரடியாக அறிவித்துவிட்டது.
போபாலுக்குத்தான் போவேன்
ஆனால் அத்வானியோ அங்கு போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி என்பதால் ஏற்கவே முடியாது ..நான் போபாலுக்குத்தான் போவேன் என்று நேற்று இரவு முதல் அடம்பிடித்து வருகிறார்.
வேற வழியில்லை மிஸ்டர் அத்வானிஜி..
அத்வானியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் சுஷ்மா ஸ்வராஜூம் அத்வானியை நேரில் சந்தித்து, என்ன செய்வது காந்திநகர் தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சமாதானப்படுத்திப் பார்த்தார். ஆனாலும் அத்வானியின் அச்சம் அகலவில்லை.
அத்வானி- மோடி சந்திப்பு
இதன் உச்சமாக நரேந்திர மோடியும் அத்வானியை நேரில் சந்தித்துப் பேசினார். காந்திநகர் தொகுதியில்தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று மோடியும் அத்வானியிடம் வலியுறுத்தியுள்ளார்.
காந்திநகருக்கு வேறு வேட்பாளர்?
தற்போதைய நிலையில் அத்வானி தொடர்ந்தும் அடம்பிடித்தால், "சொந்த தொகுதியான காந்திநகரை அத்வானிக்கு ஒதுக்கினோம்.. அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தோம். ஆனால் அவர் போட்டியிட விரும்பாததால் அந்த தொகுதியில் மற்றொரு வேட்பாளர் களமிறக்குகிறோம் என்று அதிரடியாக அறிவிக்கவும் மோடி ஆதரவு பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.
அத்வானி அரசியல் வாழ்க்கைக்கு முடிவு?
காந்திநகர் தொகுதியில் போட்டியிட வைத்து தோற்கடித்து விடுவது அல்லது காந்திநகருக்கு வேறு ஒரு வேட்பாளரை நிறுத்தி அத்வானியை தேர்தல் களத்திலேயே இல்லாமல் செய்துவிடுவது என்பதுதான் மோடி ஆதரவு பாரதிய ஜனதா தலைவர்களின் இறுதி கட்ட வியூகமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. அதாவது காந்திநகர் தொகுதியை முன்வைத்து அத்வானியின் அரசியல் கதையை முடிக்க முடிவு செய்துவிட்டனர் பாஜக தலைவர்கள் என்றே தெரிகிறது.
86 வயதான பின்னும் அடங்காத அரசியல் பேராசைகளால் அத்வானி நிலை அந்தோ பரிதாபமாகிவிட்டதே!