கேரளாவில் நான்கு வயதான எல்.கே.ஜி குழந்தை பலாத்காரம் – இரண்டு மாணவர்கள் கைது!
திருவனந்தபுரம்: கேரளாவில் நான்கே வயதான எல்.கே.ஜி குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இந்தப் பள்ளியில் மதம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படுகிறது.
நான்கரை வயது குழந்தை:
இப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்பில் எல்.கே.ஜி படித்துவரும் நான்கரை வயது மாணவியிடம் கடந்த மாதம் 30 ஆம் தேதி அன்று அன்பாக பேசிய இரு மாணவர்கள், அந்தக் குழந்தையை ஹாஸ்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
வலியால் துடித்த மாணவி:
தனிமையை பயன்படுத்தி அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மாணவர்கள் சிறுமி வலியால் துடித்து, கூச்சலிடவே அந்த இடத்தை விட்டு தப்பியோடினர்.
பெற்றோரிடம் அழுகை:
இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்னர் பிறப்புறுப்பில் தாங்க முடியாத வலியால் துடித்த அந்தக் குழந்தை, பள்ளி ஹாஸ்டலில் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு:
இதனையடுத்து வாலையம் பகுதி போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையின் முடிவில் அவள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
கட்சியினர் ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில் பால் மணம் மாறாத குழந்தையிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துக் கொண்ட அந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர் அணியினர், சம்பவம் நிகழ்ந்த பள்ளியின் முன் கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் ஆர்ப்பாட்டம்:
இதனையடுத்து தனியார் பேருந்தில் கிளீனராக வேலை செய்யும் ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதியினர், உண்மை குற்றவாளியை மறைத்து அப்பாவிகளை இந்த வழக்கில் சிக்கவைக்கும் போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அடையாளம் காட்டிய பள்ளி:
இதனால் வேறு வழியின்றி, உரிய விசாரணை நடத்திய அந்தப் பள்ளி நிர்வாகம் உண்மை குற்றவாளிகளை போலீசாருக்கு அடையாளம் காட்டியது.
இரண்டு மாணவர்களும் கைது:
நான்கரை வயது குழந்தையிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துக் கொண்ட சுமார் 18 வயது மதிக்கத்தக்க இருவரை இன்று கைது செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரும் அந்தப் பள்ளியில் மதம் சார்ந்த கல்வியை கற்பதற்காக அங்கேயே தங்கி வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.