செக் மோசடி வழக்கு... மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கோர்ட் ஒன்று, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது.
அவர் மட்டுமல்லாமல், கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரகுநாத்துக்கு எதிராகவும் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஏப்ரல் 13ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மல்லையாவுக்கு எதிராக ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் சார்பில் வழக்குத் தொடப்பட்டிருந்தது. அதில் மல்லையா நிறுவனம் அளித்த காசோலைகள், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டதாகவும், தங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர்கள் செலுத்தத் தவறி விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
தற்போது மல்லையா நாட்டை விட்டுத் தப்பி ஓடி இங்கிலாந்துக்குப் போய் விட்டது நினைவிருக்கலாம். பல வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ. 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு ஒரு பைசாவைக் கூட அவர் திரும்பித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.