குடிசை வீட்டில் வாழும் பாஜகவின் எம்எல்ஏ.. ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு வீடு கட்டித் தரும் மக்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாத இடைத்தேர்தலில் முதல் முறையாக எம்எல்ஏவான சீதாராம் ஆதிவாசிக்கு முறையாக நல்ல வீடு கூட இல்லாத நிலையில் அவருக்கு உள்ளூர்வாசிகள் வீடு கட்டிக் கொடுக்கும் நெகிழ்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இன்று அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் பணம், பினாமி என முழுக்க முழுக்க சொத்துகளுடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு ஓட்டை குடிசையில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவரது நிலையை பார்த்த அப்பகுதி மக்கள் பணத்தை கொடுத்து அவர் நல்ல வீட்டில் குடியேறுவதற்கான வழியை செய்து வருகின்றனர். ஷியோபூர் மாவட்டத்தில் விஜய்பூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர் சீதாராம் ஆதிவாசி.
முதல் சம்பளம்
55 வயதாகும் இவர் அண்மையில் நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது முதல் சம்பளத்துக்காக காத்து கொண்டிருக்கிறார். அவருக்கு சம்பளம் ரூ. 1.10 லட்சம் ஆகும்.
அசிங்கம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கஷ்டம் என்றால் எங்களுக்காக எந்த நேரத்திலும் போராடியக் கூடியவர் சீதாராம் எம்எல்ஏ. அவர் குடிசை பகுதியில் வாழ்ந்து வருவது எங்களுக்கு அசிங்கமாக உள்ளது.
இயன்ற நிதி
இதுகுறித்து எம்எல்ஏவிடம் கூறினோம். ஆனால் அவரோ நல்ல வீடு கட்ட தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் இந்த தொகுதி மக்கள் தங்களால் இயன்ற ரூ. 100 முதல் ரூ. 1000 வரை பணத்தை அளிக்கின்றனர்.
பொதுமக்கள்
அதன் மூலம் இரு அறைகள் கொண்ட வீடு கட்டப்பட்டு வருகிறது என்றார். இதுகுறித்து எம்எல் சீதாராம் கூறுகையில் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் எடைக்கு எடை காசு செலுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடும் உழைப்பு
சொன்னதுபோல் நான் வெற்றி பெற்றதால் எனது எடைக்கு எடை காசை செலுத்தினர். அந்த காசுகளை செலவு செய்து வீடு கட்டப்படுகிறது. முதல் சம்பளத்தை எனது தொகுதி மக்களின் நலனுக்காக பயன்படுத்த போகிறேன். என் மீது இத்தகைய அன்பை பொழியும் மக்களுக்கு நான் கடுமையாக உழைப்பேன் என்றார் சீதாராம்.