வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் மூலம் இந்தியாவுக்குள் இனி இலவசமாக பேச முடியாது!
டெல்லி: செல்போனில் வாட்ஸ் ஆப், ஸ்கைப் மூலம் இலவசமாக பேசி வந்த மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி... இனி வாட்ஸ் அப், ஸ்கைப், வைபர் உள்ளிட்ட செயலிகளில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் சேவையை முறைப்படுத்த மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இனி இந்தியாவுக்குள் வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலம் இலவசமாக பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய தொலைத்தொடர்புத் துறை 'இணைய சமநிலை' தொடர்பான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மக்களுக்கு இணைய சேவை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவுக்குள் வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலர் இலவசமாக பேசி வந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது டிராய் அறிவிப்பு.
வருவாய் இழப்பு
செல்போனில் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களும், ஸ்கைப் போன்ற வலை தளங்களும் இணையதளம் வாயிலாக இலவச அழைப்புகளை வழங்குவதன் மூலம் தங்களுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறையிட்டிருந்தன.
கட்டணம் வசூலிக்கப்படுமா?
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் அமைப்பிடம் வலியுறுத்தியது. ‘
ஜீரோ திட்டம்
ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த புரட்சி போராட்டத்துக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
நாடுமுழுவதும் எதிர்ப்பு
நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக, இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் இந்த பிரச்சனை, பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, இணைய சமநிலை தொடர்பாக மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டது.
டிராய் ஆய்வறிக்கை வெளியீடு
பல லட்சம் மக்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, தொலைத்தொடர்பு துறை, இன்று அதன் இணையத்தளத்தில், இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 24 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் பெரும்பாலும் மக்களுக்கு சாதகமாக இயற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு இணைய சேவை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் கிடைக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்த 112 பக்க ஆய்வறிக்கை இன்று இந்திய தொலைத்தொடர்பு துறையின் http://www.dot.gov.in/ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்து தொலைத்தொடர்பு துறை நியமித்த குழு அளித்த பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மக்களின் நலன் முக்கியம்
'நெட் நியூட்ராலிட்டி' விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இணைய சமநிலை
அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று தொலைதொடர்பு நிறுவனங்களையும் அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இணைய சமநிலையோடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இலவச அழைப்புகள்
வெளிநாடுகளுக்கு இணையவழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளுக்கான சேவைகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், அதேவேளையில் உள்ளூர் அழைப்புகளைப் பொருத்தவரை, இணையதளத்தில் இலவச அழைப்புகள் வழங்கும் நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளே பின்பற்றப்பட வேண்டும் எனவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இலவச அழைப்புகள்
வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களில் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இனி வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலம் இலவசமாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள் தெரிவிக்கலாம்
இணைய வழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு அனுப்பலாம் என்றும் பார்கவா தலைமையிலான குழு கூறியுள்ளது.
ஊக்குவிக்க முடியாது
இணையதளக் கட்டணமின்றி சில வலை தளங்களைப் பயன்படுத்தும் வகையில் முகநூல் நிறுவனம், இன்டர்நெட்.ஆர்க் என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சேவையானது, நெட் நியூட்ராலிட்டி விதிகளுக்கு எதிரானது என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியாது எனவும் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
உரிமைகள் உறுதி செய்யப்படும்
இணையதள சேவை அனைவருக்கும் நேர்மையாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் முற்போக்கான அணுகுமுறை கடைபிடிக்கப்படும். நாட்டின் தேவைக்கு ஏற்ப கொள்கைகள் வகுக்கப்படும்.இணையத்தை பயன்படுத்துபவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.