நீளமான தாடி இருந்தது.. முஸ்லீம்னு நினைச்சு அடிச்சுட்டோம்.. வக்கீலை கொலைவெறியுடன் தாக்கிய ம.பி.போலீஸ்
முஸ்லிம் என நினைத்து வக்கீல் ஒருவரை மபி போலீசார் அடித்து விட்டனர்
போபால்: "நீளமான தாடி இருந்தது.. அதான் முஸ்லிம்னு நினைச்சு பலமா அடிச்சிட்டோம்" என்று வக்கீல் ஒருவரை அடித்து தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது மத்திய பிரதேச போலீஸ்.
மத்திய பிரதேசத்தில் வக்கீலாக இருப்பவர் தீபக் புந்துலே... இவர் போன 23ம் தேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் போயிருந்தார்.. தீபக் முழு நீள தாடி வைத்திருந்தார்.
அவரைப் பார்த்த அங்கிருந்த போலீசார் சரமாரியாக தாக்கி உள்ளனர். பிறகுதான் அவர் வழக்கறிஞர் என்பது தெரியவந்துள்ளது.. விஷயம் தெரிந்த உடனேயே மன்னிப்பும் கேட்டனர்.
வெயில் காலத்தில் மக்கள் அவதி... நகர்ப்புறத்தில் சலூன் கடைகளை திறக்க அனுமதி தருக -கொங்கு ஈஸ்வரன்
அதிர்ச்சி
இந்த சம்பவத்தினால் தீபக் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்.. இதை பற்றி அவர் சொல்லும்போது, "பிதுல் பகுதியில் இருக்கும் மெடிக்கல் ஷாப்புக்கு போயிருந்தேன்.. மருந்து கொஞ்சம் வாங்க வேண்டியிருந்தது.. 15 வருஷமா எனக்கு சுகர் இருக்கு.. பிரஷரும் இருக்கு... அதுக்கான மருந்து காலியாயிடுச்சு.. அதனாலதான் கடைக்கு போனேன்.
மெடிக்கல் ஷாப்
அப்போ நான் மெடிக்கல் ஷாப் போகும்போது, லாக்டவுன் அமலில் இல்லை.. ஆனால் 144 தடை உத்தரவு இருந்தது.. அதுக்குதான் என்னை போலீசார் மொத்தமா தடுத்து நிறுத்தி கண்மூடித்தனமா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நான் எவ்வளவோ சொல்லியும் அது அவர்கள் காதில் விழவே இல்லை.. ரொம்ப நேரம் கழித்துதான் என் பேச்சு அவர்கள் காதில் எட்டியது.
சிகிச்சை
எனக்கு உடம்பெல்லாம் வலி.. உடனே என் நண்பர்களை போனில் கூப்பிட்டேன்.. அவங்கதான் உடனே வந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க.. மறுநாளே அதாவது மார்ச் 24ம் தேதி என்னை தாக்கிய அந்த போலீசார் மீது கேஸ் போட்டேன்.. மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பினேன்.. முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினேன்.
வாபஸ்
இதெல்லாம் பார்த்து போலீசார் எனக்கு நெருக்கடி தர ஆரம்பித்தனர்.. புகாரை வாபஸ் வாங்க சொன்னார்கள்.. மே 17ம் தேதி என் வீட்டுக்கும் வந்தார்கள்.. ஏதோ தப்பு நடந்துடுச்சு.. வேண்டும் என்றே உங்களை நாங்க அடிக்கலை.. நீளமா தாடி இருக்கவும் பார்க்கறதுக்கு முஸ்லிம் மாதிரியே இருந்தீங்க.. அதான் அடிச்சோம், எங்களை மன்னிச்சிடுங்க.. புகாரை வாபஸ் வாங்கிக்குங்க" என்று கேட்டனர்" என்று சொல்லி முடித்தார் தீபக்.
தப்பாச்சே!!
இனி தீபக் அந்த புகாரை வாபஸ் பெறுவாரா? அல்லது வழக்கு விசாரணை நடைபெறுமா என்பது இனிமேல்தான் தெரியவரும். அது எல்லாம் சரி.. முஸ்லீமா இருந்தா அடிக்கலாம்னு சட்டம் ஏதாவது போட்டிருக்காங்களா இந்தியாவில் புதிதாக.. மத்தியப் பிரதேச போலீஸாரின் சமாதானப் பேச்சே தவறா இருக்கே!