பி.சி.சி.ஐக்கு கடிவாளம்? லோதா குழு அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்!!
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐக்கு கடிவாளம் போடும் வகையிலான பரிந்துரைகளுடன் நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங் விவகாரம் விஸ்வரூபமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி முட்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இக்குழுவில் நீதிபதிகள் அசோக் பிகான், ரவீந்தரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் இடைக்கால பரிந்துரைப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு காலத்துக்கு ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே லோதா குழுவின் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக காரசர விவாதம் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் சங்கங்களை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பிடியில் இருந்து மீட்கும் வகையிலான பரிந்துரைகளை லோதா குழு அளிக்கப் போவதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.