லோதா கமிட்டிக்கு எதிராக ஐசிசியை அணுகவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் பிசிசிஐ தலைவர் பிரமாண பத்திரம்
மும்பை: லோதா கமிட்டி பரிந்துரைகள் தொடர்பாக ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஆலோசித்ததை ஒப்புக்கொண்டுள்ள பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர், அதேநேரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக, கடிதம் எதுவும் கேட்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், இன்று, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது:
ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில், துபாயில், ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். லோதா கமிட்டி அறிக்கையில் கூறியபடி பிசிசிஐ நிர்வாகத்தில், சிஏஜி உறுப்பினர் ஒருவரை நியமிப்பது, பிசிசிஐயின் தன்னாட்சியை பாதிக்கும் செயலா என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டேன்.
மனோகர் ஷஷாங்க், பிசிசிஐ தலைவராக பதவி வகித்தபோது, சிஏஜி குழுவை சேர்ந்த நிர்வாகிகளை பிசிசிஐயில் சேர்த்துக்கொள்ள முடியாது என முடிவெடுத்தார். சிஏஜி உறுப்பினரை சேர்த்துக்கொண்டால் பிசிசிஐ மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால்தான் ஐசிசியிடம் நான் விளக்கம் கேட்டேன். பிசிசிஐக்கு ஆதரவாகவோ, சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த கூடாது என்பதற்காகவோ, ஐசிசியிடமிருந்து எந்த கடிதத்தையும் கேட்கவில்லை. இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.