தமிழகத்தில் விரைவில் லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
லோக் ஆயுக்தா விவகாரத்தில் இன்னும் சொந்த கால்களில் நிற்கவில்லையா என தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: லோக் ஆயுக்தா விவகாரத்தில் இன்னும் சொந்த கால்களில் நிற்காமல் லோக் பால் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்காக காத்திருப்பதா என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் , மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்படி லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதா பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுத்தவில்லை.
அதுபோல் ஊழலை வெளிக்கொண்டு வரும் விதமாக நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு லோக்பால் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. அதன் காரணமாக தாங்கள் காத்திருப்பதாக பதில் அளிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் தமிழக அரசு இன்னும் சொந்த கால்களில் நிற்கவில்லையா என கேள்வி எழுப்பினர். தமிழக அரசு லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த முயற்சி எடுக்காததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் என்றும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.