மோடி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 4ல் தொடக்கம்
டெல்லி: மோடி அரசின் முதலாவது லோக்சபா கூட்டத்தொடர் ஜூன் 4 முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 9ம்தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்ற உள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த திங்கள்கிழமை பதவி ஏற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக நேற்று (புதன் கிழமை) மீண்டும் மத்திய அமைச்சரவை கூடுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜூன் 4-ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. 16வது நாடாளுமன்றம் உருவான பிறகு நடைபெறும் முதலாவது கூட்டத்தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தொடரின் முதல் இருநாட்களான, ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில் புதிய எம்.பி.கள் பதவி ஏற்கின்றனர், 6ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு பொறுப்பேற்ற முதல் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்துவது மரபு. அதன்படி ஜூன் 9ம்தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். இவ்வாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.