ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயார்.. பீகார் பேரணியில் அறிவித்தது ஆர்ஜேடி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாங்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாங்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
பீகாரில் காங்கிரஸ் தலைமையில் இன்று மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி ஆகும்.
பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த பேரணியில் இன்று கலந்து கொண்டுள்ளனர். ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி), ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளது.
|
பெரிய அளவில்
இந்த பேரணி காங்கிரஸ் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததாக கூறப்படுகிறது. பீகாரை சேர்ந்த விவசாயிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் இந்தியாவின் இளம் எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இவர் சார்பாக ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் தேஜஸ்வி யாதவே கடைசியில் விழாவில் கலந்து கொண்டார்.
என்ன பேசினார்
அதில் பேசிய தேஜஸ்வி யாதவ், இந்த மாநாடு பாஜகவிற்கு லோக்சபா தேர்தலில் பயத்தை உண்டாக்க கூடிய மாநாடு. பாஜக நாடு முழுக்க கலவரத்தை கொண்டு வர பார்க்கிறது. அவர்களை நாம் இப்படித்தான் எதிர்க்க வேண்டும். நாம் இப்படி ஒற்றுமையாக இருந்தால்தான் பாஜகவை எதிர்க்க முடியும். இது தேர்தலுக்கு பின்பும் தொடர வேண்டும்.
ராகுல்
இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி தகுதி ஆனவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாங்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம். ஆனால் அவர் தேர்தலுக்கு பின்பும் சிறிய கட்சிகளுடன் இதே கூட்டணியை தொடர வேண்டும். எல்லோருக்கும் ஆட்சியில் இடம் கொடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் இந்த பேச்சு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மூன்று தலைவர்கள்
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை முதன்முறையாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதன்பின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பதாக கூறினார். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளமும் அப்படி கூறி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.