லோக்சபா தேர்தலில் 3-வது அணி அமைக்க தீவிர முயற்சி- டெல்லியில் 14 கட்சிகள் 5-ந் தேதி ஆலோசனை
டெல்லி: லோக்சபா தேர்தலில் 3வது அணி அமைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 5-ந் தேதி 14 அரசியல் கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளன.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும் போட்டியிட இருக்கின்றன.
இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத இடதுசாரி கட்சிகளும் மற்றும் பல மாநில கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணிகளுக்கு மாறாக 3-வது அணி ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் அது கைகூடாமல் போய்விட்டது.
இப்போது தேர்தல் நடைபெற இருப்பதால் 3-வது அணி ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகின்றார். இடதுசாரிகளும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக டெல்லியில் வருகிற 5-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என்றார்.
இக்கூட்டத்தில் மொத்தம்14 கட்சிகள் கலந்து கொள்ள இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.