நான் சோனியா காந்தி பேசுகிறேன்: டி.வி.யில் 3 நிமிடம் தோன்றி பேசிய 'மேடம்'
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு 8.57 மணி அளவில் யாரும் எதிர்பாராதவிதமாக தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது அவர் பாஜக மற்றும் அதன் பிரதமர் வேட்பாளரான மோடியின் பெயரை குறிப்பிடாமல் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக தெரிவித்தார்.
நாட்டு மக்களை பிரிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் போராடுவதாக சோனியா கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஒற்றுமை
நாம் ஒற்றுமையை விரும்புகிறோம். அவர்களோ என்னை நம்புங்கள் என்று கூறி வருகிறார்கள். அவர்களின் நோக்கத்தில் வெறுப்பும், பொய்யும் உள்ளது. பிரித்தாள்வது மற்றும் சர்வாதிகாரம் தான் அவர்களின் கொள்கைகள். அவர்களின் கொள்கைகள் நம் நாட்டை அழித்துவிடும் என்றார்.
3 நிமிடங்கள்
சோனியாவின் பேட்டி அனைத்து இந்தி தொலைக்காட்சி சேனல்களிலும் நேற்று இரவு சரியாக 3 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டன.
ராகுல்
ராகுல் காந்தியின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதால் சோனியாவை பிரச்சாரத்திற்கு வருமாறு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் நாட்டின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
பாஜக
சோனியா ஒரு புறம் பாஜக பெயரைக் கூறாமல் குறை கூற பாஜகவோ, நாங்கள் பாரதீயத்திற்காக வாக்கு கேட்கிறோம். ஆனால் காங்கிரஸோ குடும்ப அரசியலுக்காக வாக்கு கேட்கிறது என்று தெரிவித்துள்ளது.