லோக்சபாவிலும் நிறைவேறியது லோக்பால் மசோதா!
டெல்லி: தெலுங்கானா தொடர்பான அமளிக்கு இடையே லோக்சபாவில் இன்று லோக்பால் மசோதா நிறைவேறியது. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு சமாஜ்வாடி கட்சி லோக்சபாவில் வெளிநடப்பு செய்தது.
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது.,
ஆனால் அதை வலுவானதாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதைத் தொடர்ந்து அம்மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று ராஜ்யசபாவில் 5 மணி நேர விவாதத்துக்குப் பின்ன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் லோக்பால் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி வெளிநடப்பு செய்தது. மேலும் தெலுங்கானா விவகாரம் தொடர்பாகவும் லோக்சபாவில் அமளி நிலவியது.
இந்த அமளிக்கு நடுவே லோக்பால் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இரு சபைகளிலும் லோக்பால் மசோதா நிறைவேறியதால் அது சட்டமாகிறது.