ஒருபக்கம் அம்பேத்கர் துதி, மறுபக்கம் தலித் விரோத போக்கு.. ஜே.என்.யூ விவாதத்தில் சீறிய காங்.
டெல்லி: தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜே.என்.யூ விவகாரங்கள் குறித்து இன்று மதியம் லோக்சபாவில் விவாதம் தொடங்கியது. அம்பேத்கரை துதிபாடும் அரசு தலித்துகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிராத்யா சிந்தியா குற்றம்சாட்டினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியதுமே, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரோகித் வெமுலா மற்றும் ஜே.என்.யூ விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இருப்பினும், பிற அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு உடனடியாக அதுகுறித்து விவாதிக்க முடியாது என கூறிய சபாநாயகர், இதை ஏற்காத சுமித்ரா மகாஜன், மதியம் 3 மணிக்கு விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.
எனவே மதியம் 3 மணிக்கு விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி ஜோதிராத்யா சிந்தியா பேச்சை தொடங்கினார். அரசை கடுமையாக சாடினார் அவர்.
அம்பேத்கரை துதிபாடும் பாஜக அரசு, மறுபக்கம் தலித்துகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ரோகித் தற்கொலை அதற்கு ஒரு உதாரணம். கோஷமிடுவதெல்லாம் தேசத்துரோக குற்றத்தின்கீழ் வராது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் தூண்டுதலில் ஜே.என்.யூ மாணவர்கள் செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜ்நாத் இவ்வாறு கூறும் முன்பாக அதுகுறித்து விசாரணை நடத்தினாரா? ஜே.என்.யூ விரோத போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீத்தாராம் யெச்சூரி, வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.
பாஜக எம்.பிக்கள் பலர் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும்போது அமைதியாக இருந்த அரசு, மாணவர்கள் மீது மட்டும் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளது. பல்கலைக்கழகங்களில் மூக்கை நுழைக்கிறது மத்திய அரசு. இவ்வாறு அவர் பேசினார். அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் பெயரை அவர் பயன்படுத்தியதை, லோக்சபா சபாநாயகர் கண்டித்தார். அவையில் இல்லாதவர்கள் குறித்து பேசக்கூடாது என்பது மரபு என சபாநாயகர் தெரிவித்தார்.