பெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே
தமிழகத்தில் மோடி அரசுக்கு எதிரான அலை விஸ்வரூபமெடுத்திருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
டெல்லி: நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் பிரதமர் மோடி அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவதாகவும் தமிழகத்தில் இந்த எதிர்ப்பு அலை விஸ்வரூபமெடுத்திருப்பதாகவும் லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலையில் பாஜக அரசுக்கு எதிரான அலையே நாடு முழுவதும் வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மோடி அரசின் செயல்பாடுகள் தொடர்பாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் பெரிய மாநிலங்கள் அனைத்திலும் மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதாக அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு விவரம்:
இரு மடங்கு அதிகரிப்பு
பெரிய மாநிலங்களான ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஒடிஷா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மே மாதம் இருந்த மோடி அரசு மீதான அதிருப்தி அனைத்து மாநிலங்களிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
பீகாரில் சற்று குறைவு
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களிலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளது. உ.பியில் 44%. மத்திய பிரதேசத்தில் 46%. ராஜஸ்தானில் 37% அதிருப்தி இருக்கிறது. ஆனால் பீகாரில் 29% அதிருப்தி உள்ளது.
மோடிக்கு எதிரான தென்மாநிலங்கள்
தென் மாநிலங்களில் கேரளாவில் 64% ஆந்திராவில் 68%; தெலுங்கானாவில் 63% அதிருப்தி நிலவுகிறது. கர்நாடகாவில் சற்று குறைவாக 40% மோடி அரசு மீது அதிருப்தி இருக்கிறது.
மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் விஸ்வரூபம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2017-ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு மீதான அதிருப்தி 55% ஆக இருந்தது. தற்போது இது விஸ்வரூபமெடுத்து 75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் மோடி அரசுக்கு எதிராக அலை அதிக அளவில் இருக்கிறது.
ஒடிஷா, மே.வங்கத்திலும் அதிகரிப்பு
ஒடிஷாவில் கடந்த ஆண்டு 14% இருந்த மோடி அரசு மீதான அதிருப்தி தற்போது 28% ஆகியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு 24% ஆக மோடி அரசுக்கு எதிர்ப்பு என்பது தற்போது 45% ஆகியுள்ளது.
சொந்த மாநிலத்தில் கடும் அதிருப்தி
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 20% இருந்த எதிர்ப்பு தற்போது 40% என அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் 28% இருந்த மோடி அரசுக்கான எதிர்ப்பு, தற்போது 47% என உயர்ந்திருக்கிறது.