ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றம்- உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறார் ஹஸாரே
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.
ஊழல் தடுப்பு லோக்பால் மசோதாவை மத்திய அரசு திருத்தங்களுடன் ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்தது. இன்று இது விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
கிட்டத்தட்ட அத்தனை கட்சிளுமே இந்த மசோதாவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்திருந்ததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படவில்லை.
அடுத்து நாளை லோக்சபாவில் இந்த மசோதா விவாதத்திற்கு வருகிறது. விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறும்.
லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதுகுறித்து அன்னா ஹஸாரே மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் ராலேகான் சித்தியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், லோக்சபாவிலும் இது நிறைவேற்றப்பட்டவுடன் எனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவேன் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ....
கடந்த 2011ம் ஆண்டு லோக்பால் மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்தது. அப்போது அங்கு கடும் விவாதம், எதிர்ப்புகள், ஆதரவுகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் அது நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர் ராஜ்யசபாவில் மீண்டும் தாக்கலானது. இன்று அது நிறைவேறியது.
இதை நாளை லோக்சபா விவாதிக்கவுள்ளது.