உண்ணாவிரதம் வாபஸ்! லோக்பால் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற அன்னா வலியுறுத்தல்!!
ராலேகான் சித்தி: வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தாம் மேற்கொண்டு வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று அன்னா ஹசாரே கைவிட்டார். ராஜ்யசபாவில் நேற்று லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து லோக்சபாவிலும் இன்று நிறைவேறியதால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
ராலேகான் சித்தியில் கடந்த 10-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் அன்னா ஹசாரே. இந்நிலையில் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் ராகுலின் முயற்சிகளுக்கு ஹசாரே ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு ராகுலும் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் ராஜ்யசபாவிலும் லோக்சபாவிலும் வலுவான லோக்பால் மசோதா நேற்றும் இன்றும் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமது உண்ணாவிரதத்தை இன்று அன்னா ஹசாரே கைவிட்டார். அப்போது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.