கிரண் ரிஜிஜு ஊழல், ரூபாய் நோட்டு விவகாரம்- தொடரும் நாடாளுமன்றம் முடக்கம்!
டெல்லி: அமைச்சர் கிரண் ரிஜிஜு ரூ. 450 கோடி அளவுக்கு ஊழல் செய்த விவகாரம், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி 500 மற்று 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவித்தார். அதில் இருந்து நாட்டில் பணத் தட்டுப்பாடாக உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்தே இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
குளிர்கால கூட்டத்தொடர் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் இன்று காலை லோக்சபா கூடியது. அவைக்கு மோடி வந்திருந்தார். இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் ரூ. 450 கோடி ஊழல் செய்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.