பலே ஐடியா! 450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்கள்- வரிந்து கட்டும் ப.சிதம்பரம்
மும்பை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிராக பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால் எளிதாக வெல்ல முடியும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் தொடர்பாக ப.சிதம்பரம் மும்பையில் கூறியதாவது: நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமானது. கர்நாடகா மாடலைப் போல அனைத்தும் இருக்காதுதான். ஆனாலும் காங்கிரஸ் ஆதரவு சக்திகளுடன் போராடும். அதேநேரத்தில் கர்நாடகாவில் வேட்பாளர்களை தேர்வு செய்ததைப் போல மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
லோக்சபா தேர்தலில் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். மொத்தம் 450 தொகுதிகளிலாவது பாஜக வேட்பாளர்களை எதிர்த்து பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இது என்னுடைய விருப்பம். இது தொடர்பாக ஜூன் 12-ந் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது புதிய ரூபாய் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டால் என்ன அர்த்தம்? இது அப்பட்டமான ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை. உலகில் எந்த ஒரு நாடாவது இப்படி ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது வாபஸ் பெறுவது என செயல்படுகிறதா? ஆர்பிஐ இது தொடர்பாக தரும் ஒவ்வொரு விளக்கமும் அபத்தமாக இருக்கிறது. முன்னர் ரூ2,000 நோட்டுக்கு விளக்கம் தந்ததும் முட்டாள்தனமாகத்தான் இருந்தது.
மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாட்டின் பிரதமர் ஆஸ்திரேலியாவுக்கும் ஜப்பானுக்கும் செல்கிறார். மணிப்பூர் மாநிலம் செல்ல நேரமில்லை. மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னரே மணிப்பூர் மாநிலம் சென்றிருக்க வேண்டும்.
நாட்டுக்கு பதக்கம் வாங்கி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை வரவேற்க அமைச்சர்கள் விமான நிலையங்களுக்கே செல்கின்றனர். ஆனால் இப்போது அதே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீதி கோரி போராடுகின்றனர்; அவர்களை சந்திக்க அந்த மத்திய அமைச்சர்களுக்கு நேரம் இல்லையா? டெல்லியில் போலீசார்தான் மல்யுத்த வீரர்களைப் போல செயல்படுகின்றனர். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.