மகளின் காதல் திருமணம்... ரூ. 1 கோடி கொடுத்து மருமகன் குடும்பத்தை கெளரவக்கொலை செய்த தொழிலதிபர்
டெல்லி: ஆந்திராவில் உள்ள தொழிலபதிபரைக் கொல்ல ரூ. 1 கோடி கொடுத்து கூலிப்படையை செட்டப் செய்த லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரின் சதிச் செயலை டெல்லி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொல்லப்பட்ட ஆந்திரத் தொழிலதிபரின் வயது 70 ஆகும். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூன்று பேரையும் கடந்த மாதம் இந்தக் கூலிப்படை கொலை செய்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் இந்த சர்வதேச சதிச் செயல் தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பேரையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நபரின் பெயர் புத்தம் கோவிந்து. இவரும் ஆந்திராவைப் பூர்வீமாகக் கொண்டவர்தான். ஆனால், தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
கொல்லப்பட்ட தொழிலதிபரின் பெயர் கந்தம் நாகேஸ்வரராவ். 70 வயதாகும் இவரது மகன்கள் கந்தம் மாரய்யா (40), கந்தம் பாகிடி மாரய்யா (30). இவர்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும், செப்டம்பர் 24ம் தேதி காலை என்எச் 16ல் காரில் போய்க் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தொழிலதிபரின் குடும்பத்துக்கும், புத்தம் கோவிந்து குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலம் பூசல் இருந்து வந்தது. இந்த பூசலில்தான் ஆள் வைத்து விஜயவாடா தொழிலதிபர் குடும்பத்தைத் தீர்த்துக் கட்டியுள்ளார் புத்தம் கோவிந்து. இந்த கொலை வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த நான்கு கூலிப்படையினர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைக்கான பின்னணி காரணம் இதுதான். கோவிந்துவின் மகளும், நாகேஸ்வரராவின் மகன் கந்தம் மாரய்யாவும் காதலித்துள்ளனர். இதற்கு கோவிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அதைப் பொருட்டுத்தாமல், கோவிந்துவின் மகள், மாரய்யாவுடன் போய் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தை மாரய்யாவின் குடும்பம் ஏற்றுக் கொண்டது.
இதனால், கோவிந்து கோபமடைந்து விட்டார். மாரய்யா குடும்பத்தைப் பழி தீர்க்க திட்டமிட்டார். இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த சிலரை ஏற்பாடு செய்தார். சம்பவத்தன்று காரிலும், மோட்டார் சைக்கிளும் கூலிப்படையினர் வந்துள்ளனர். நாகேஸ்வரராவின் காரை வழியில் தடுத்து நிறுத்தி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நாகேஸ்வரராவின் கார் டிரைவர் காயமின்றி தப்பி விட்டார். மற்ற மூவரும் உயிரிழந்தனர்.