இனி சீக்கிரம் ஊருக்கு போகலாம்.. 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கிறது ரயில்வே துறை
முதல்கட்டமாக 51 ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறதாம். இதற்காக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவற்றை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: சுமார் 500 ரயில்களின் பயண நேரத்தை குறைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை பயண நேர குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது.
புதிய கால அட்டவணை நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று ரயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் உத்தரவின் பேரில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 500 ரயில்கள் பயண நேரம் 15 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை குறைக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக 51 ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறதாம். இதற்காக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவற்றை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில் பாதைகளை மேம்படுத்துவது, சிக்னல்களை சீரமைப்பது, புது வகை ரயில் பெட்டிகளை இணைப்பது போன்றவற்றின் மூலம், ரயில்கள் வேகம் அதிகப்படுத்தப்பட உள்ளது. மணிக்கு 130 கி.மீ வரை அதிகபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.