நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதித்த லாரி உரிமையாளர்கள்! தமிழகத்தில் மணல் லாரிகள் இயங்கும்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 373 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அறிவித்து இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை செயலாளர் விஜய் ஜிப்பர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. இதனால் இந்தியா முழுவதும் 92 லட்சம் லாரிகள் ஓடவில்லை.
லாரிகள் மட்டுமின்றி, கண்டெய்னர் லாரிகள், மினி லாரிகள், சிறிய சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை. இதனால் சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. லாரிகள் ஸ்டிரைக்கால், நாள் ஒன்றுக்கு பல கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராசா மணி "மணல் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், கட்டுமானத்தொழில் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, நாளைமுதல், தமிழகத்தில் வழக்கம்போல மணல் லாரிகள் இயங்கும். மொத்தம் 75 ஆயிரம் மணல் லாரிகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அனைத்துமே வழக்கம்போல இயங்கும்" என்றார்.