மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி: திங்கட்கிழமை டெல்லியில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்க கட்டண முறையை ரத்து செய்வது, ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வருவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் கடந்த 1ம் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சுங்க கட்டண முறையை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கட்காரியின் கோரிக்கையை ஏற்க லாரி உரிமையாளர்கள் மறுத்தனர்.
மேலும் மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை செயலாளர் விஜய் சிப்பர் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து லாரி உரிமையாளர்களின் போராட்டம் திங்கட்கிழமை 5வது நாளாக தொடர்ந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அகில இந்திய மோட்டார் போக்குவரது காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திங்கட்கிழமை மாலை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுங்க கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக கட்காரி தெரிவித்தார்.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.