கர்நாடகாவை கலக்கும் சட்டவிரோத லாட்டரி விவகாரத்தில் கோவை மார்ட்டினுக்கு தொடர்பா?
பெங்களூர்: கர்நாடகாவை கலக்கிய ஒற்றை இலக்க லாட்டரியில் கோவையை சேர்ந்த லாட்டரி மன்னன் மார்ட்டினுக்கு தொடர்பிருப்பதாக மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறியுள்ள நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையிலும், மேலோட்டமாக அந்த சந்தேகம் எழுந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் 2007ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல், அனைத்து வகையான லாட்டரி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் சட்டவிரோதமாக ஒற்றை இலக்க லாட்டரி தொழில் ஜரூராக நடந்து வந்தது. சமீபத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, முக்கிய புள்ளியாக கருதப்படும், பாரிராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பாரிராஜன்
பாரிராஜனின் பூர்வீகம் தமிழகம். அவரது தந்தை கோலார் தங்கவயலில் கூலி வேலை செய்ய கர்நாடக மாநிலம் குடிபெயர்ந்துள்ளார். படிப்படியாக போலீசாரை வழைத்துப்போட்டு பாரி ராஜன் லாட்டரி தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது கர்நாடக காங்கிரஸ் அரசு.
தமிழக முக்கிய புள்ளிகள்
சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை ஒப்புவிக்க காரணம், இதில் பல மாநில முக்கிய பிரமுகர்கள் தொடர்பு உள்ளது என்பதுதானாம். மஜத தலைவர் குமாரசாமி அளித்த பேட்டியில் லாட்டரி மன்னன் மார்ட்டினுக்கு இதில் தொடர்புள்ளது. இன்னும் பெரிய மீன்கள் பிடிபடவில்லை என்று தெரிவித்தார். ஏனெனில், தமிழகத்திலுள்ள சில அரசியல் பிரமுகர்களுக்கும், மார்ட்டினுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில முக்கிய புள்ளிகள் மற்றும் மார்ட்டினுக்கு இதில் தொடர்பிருப்பதாக, கர்நாடக சிஐடி போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.
யார் இந்த மார்ட்டின்?
கோவையை சேர்ந்தவர் சாண்டியாகோ மார்ட்டின். ஆனால், லாட்டரி மார்ட்டின் என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். அந்த அளவுக்கு மார்ட்டின், லாட்டரி தொழிலில் கொடிகட்டி பறந்தவர். ஆனால், 2003ல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவிலும் இவரது சாம்ராஜ்யம் பரவியது. சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இவருக்கு ஆதிக்கம் உண்டு.
மார்ட்டின் கைது
மார்ட்டினுக்கு தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தொடர்புள்ளதாக கூறப்படுவது உண்டு. 2 தமிழ் திரைப்படங்களை மார்ட்டின் தயாரித்துள்ளார். 2010ல், கோவையில் நடந்த தமிழ் மாநாட்டிலும் மார்ட்டின் பங்கேற்றுள்ளார். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிலமோசடி வழக்கில், மார்ட்டின் கைது செய்யப்பட்டார். 8 மாத சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகியுள்ளார். அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.
7 ஆயிரம் கோடி பிசினஸ்
மார்ட்டின் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சட்டவிரோத லாட்டரி தொழிலின் சூத்திரதாரி என்று கூறப்படுவதுண்டு. இவருக்கு 2 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கூறுகையில், எனது கணவர் சட்டத்துக்கு உட்பட்டுதான் லாட்டரி தொழில் செய்து வந்தார். கர்நாடகாவில் நடந்த சட்டவிரோத லாட்டரி தொழிலில் அவருக்கு தொடர்பில்லை என்று கூறினார்.
மார்ட்டின் வழியில் பாரிராஜன்
இதனிடையே கோலாரில் கைதாகியுள்ள பாரிராஜன், முற்றிலும், மார்ட்டின் போலவே செயல்பட்டுள்ளார். அதாவது, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவது, கிளப்புகளில் மெம்பராவது, நன்கொடைகள் கொடுப்பது, அரசியல்வாதிகள் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என, மார்ட்டின் என்ன செய்தாரோ அதையேதான் பாரிராஜனும் செய்துள்ளார்.